“ஒரு பணியைச் செய்ய தொடங்கிய பின் தோல்வியைக் குறித்து பயம் கொள்ளாதே; அப் பணியை நிறுத்தவும் செய்யாதே! தன் பணியை செவ்வனே செய்பவர்களே மிக மகிழ்ச்சியான மனிதர்கள்”
என்ற சாணக்கியரின் வார்த்தைக்கமைய நாம் ஒரு செயலை அல்லது தொழிலை தொடங்கினால் அதில் பயமின்றி செயற்பட வேண்டும். வாழ்வின் பல தருணங்களில் பயமென்பது மனிதனின் இயல்பாகக் காணப்படுகின்றது. இந்த பயத்தினை விலக்கி நாம் செயற்படும் போதே வெற்றி பெற முடியும்.
வாழ்வின் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் மனிதனை ஆட்கொள்ளும் பயமானது அவன் ஒரு தொழிலைத் தொடங்கும் போதும் உண்டாகின்றது. இங்கு அவனுக்கு உருவாகும் பயமானது அவன் ஆரம்பிக்கும் தொழிலில் வெற்றியா? தோல்வியா? என்று நிர்ணயிக்க நினைக்கும் போதே உருவாகிவிடுகின்றது.
அத்தோடு ஒரு தொழிலை தொடங்கும் போது அதில் ஏற்படும் சந்தேகம்; நாம் முன்னெடுக்கும் தொழிலைப் பார்த்து பிறர் தவறாக ஏதும் சொல்லிவிடுவார்களோ! என்ற எண்ணம்; மற்றும் தொழிலின் மீது நம்பிக்கை அற்ற நிலையில் இருக்கும் போது சாதாரணமாகவே எமக்கு பயம் உருவாகி விடுகின்றது. இதனை வெற்றி கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் தொழிலை தொடங்க எடுத்து வைக்கும் முதல் படியே ஆகும்.
தொழில் பற்றிய தெளிவான விளக்கம் இல்லாமல் திட்டமிடப்படாத வகையில் தொழிலை ஆரம்பிக்கும் போதே பயம் உண்டாகின்றது. ஆகையினால் நீங்கள் ஒரு தொழிலை ஆரம்பிக்கும் முன்னர் அந்த தொழிலுக்காக நீங்கள் இழக்க வேண்டியவற்றைப் பட்டியலிடுவதோடு; அந்தத் தொழிலின் மூலம் நீங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய நன்மைகளையும் பட்டியலிட மறந்துவிடாதீர்கள்.
இவ்வாறான வகையில் நீங்கள் திட்டமிட்டு ஒரு தொழிலைத் தொடங்கும் போது அங்கு பய இயல்பு ஒருபோதும் இருக்காது என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளுங்கள். மேலும் தொழிலை ஆரம்பித்து நடாத்திக் கொண்டிருக்கும் போது அந்தத் தொழிலின் மூலம் கிடைக்கவிருக்கும் வருமானத்தை எங்கிருந்து? எப்போது? பெற்றுக்கொள்ளப் போகின்றோம் எனும் எண்ணம் ஒரு வகை பய உணர்வுடன் எழுகின்றது. இதற்கான அடிப்படைக் காரணமாக அமைவது வருமானம் ஈட்டுதல் பற்றிய தெளிவான தகவலும், திட்டமிடலும் இல்லாமையே ஆகும்.
ஆகவே எத்தகைய தொழிலைத் தொடங்குவதாக இருப்பினும் அதைப்பற்றி நன்கு ஆராய்ந்தறிந்து அதனைத் திட்டமிட்டுச் செயற்படுத்துங்கள்.
பல நிறுவனங்களும் அதிகமான முதலீடுகளை கொண்டு தொழில் தொடங்கி பல சேவைகளை வழங்கினாலும் வருமானத்தை ஈட்டும் வழிகளை இன்னும் தெளிவாக அறிந்து கொள்ளாமலேயே செயற்படுகின்றன. ஆகையினால் சிறிய தொழிலாக இருப்பினும் சரி பாரியளவில் மேற்கொள்ளும் தொழிலாக இருப்பினும் சரி வருமானத்தை ஈட்டிக் கொள்ளக்கூடிய வழிகளை நன்கு அறிந்து அதை திட்டமிட்டு செயற்படுத்தும் போது உங்களிடம் காணப்படும் பயம் நீங்கி பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். எனவே இதையறிந்து செயற்பட்டு பயத்தை நீக்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.