வடக்குப் பகுதி மலைகள், தெற்குப் பகுதி வெப்பம் மிகு பாலைவனம், அருந்துவதற்கு உபயோகமற்ற நீர், குறைந்தளவிலான மழைவீழ்ச்சி, சீரற்ற காலநிலைகள் மற்றும் குறைந்தளவிலான விவசாய நிலங்களை உள்ளடக்கியதே இஸ்ரேல் நாடு. இஸ்ரேல் விவசாயத்தில் பயன்படுத்தும் தண்ணீர் 75% சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் ஆகும். இஸ்ரயேலரின் தாரக மந்திரமே “Grow More with Less (Water)” என்பதாகும். இத்தகைய குறைந்தளவு வளங்களைக் கொண்ட இஸ்ரேல் நாடு பல தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயத்துறையில் பல புதுமைகளைச் செய்வதில் உலகில் முன்னணியில் திகழ்கின்றது.
1948 ஆம் ஆண்டு 74 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்த இஸ்ரேல் தற்போது 4 இலட்சத்து 60 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்கிறது. சொட்டு நீர்ப்பாசனம், நிழல் வலை, மூடாக்கு (mulching), கணினி மயமாக்கப்பட்ட பாசனம், உரமிடல், பசுமைக்குடில் (Poly house/Green house) போன்ற பலவகையான புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி இஸ்ரேல் உலகிலுள்ள நாடுகள் முழுவதையும் தன் வசம் ஈர்த்துள்ளது.
விவசாயத்தில் சொட்டு நீர்ப்பாசன முறையை கண்டு பிடித்து அதனை வெற்றிகரமாக செயற்படுத்திய நாடு இஸ்ரேல் ஆகும். இந்த தொழில்நுட்ப முறையினை உலக நாடுகள் அனைத்தும் தற்கால கட்டத்தில் உபயோகித்து வருகின்றன. வாய்க்கால் நீர்ப்பாசனத்தில் அதிகளவிலான நீர்த்தேவை காணப்படுகின்றது. ஆனால் சொட்டு நீர்ப்பாசனத்தில் நீர்க்குழாய்கள் மூலம் பயிர்களின் வேர்ப்பகுதியில் பயிர்களுக்குத் தேவையான நீர் வழங்கப்படுவதனால் நீர் வீண்விரயமாவது தடுக்கப்படுகின்றது. அத்தோடு பயிர்களுக்குத் தேவையான உரவகைகளும் சொட்டு நீர்ப்பாசன முறை மூலம் வழங்கப்படுவதால் உரவகைகள் வீணாவதும் தடுக்கப்படுகின்றது.
அத்தோடு இஸ்ரேல் அறிமுகப்படுத்திய Mulching sheet (மூடாக்கு) என்பது சுற்றாடலில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு மண்ணை 20cm வரை மூடி வைப்பதாகும். தழை மூடாக்கு, சருகு மூடாக்கு, உயிர் மூடாக்கு, மற்றும் கல் மூடாக்கு போன்ற மூடாக்குகள் காணப்படுகின்றன. Mulching sheet (மூடாக்கு) நீர் ஆவியாவதை தடுப்பதற்கும், களைச்செடிகள் வளர்வதைக் கட்டுப்படுத்துவதற்கும, மண்ணுயிர்களுக்கான கூடாரமாகவும், பயிர்களுக்கு உரமாகவும் பயன்படுகின்றது.
பசுமைக்குடில் என்பது ஒளி ஊடுருவக் கூடிய சுவர்களையும், கூரையையும் கொண்ட கண்ணாடி அல்லது ஒளி ஊடுருவக் கூடிய பிளாஸ்டிக்கினால் அமைக்கப்பட்ட கட்டிடமாகும். இவை அளவில் சிறு கொட்டகை முதல் தொழிற் கட்டிடம் வரையிலான அமைப்புக்களைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. மிகச் சிறிய பசுமைக்குடிலானது “தண்சட்டகம்” என அழைக்கப்படுகின்றது.
பயிர்கள் நன்கு செழிப்பாக வளர்ந்து அதிக விளைச்சலைத் தருவதற்கு சூரிய ஒளி, காற்றோட்டம், நீர், கனிப்பொருட்கள் என்பன பங்களிப்புச் செய்கின்றன. இவை நன்கு பயிர்களுக்கு கிடைப்பதற்கு பசுமைக்குடில் உதவுகின்றது. கண்ணாடி அல்லது ஒளி ஊடுருவக்கூடிய பிளாஸ்டிக்கினால் இக் குடில் ஆக்கப்பட்டுள்ளது.
சூரிய ஒளி பசுமைக்குடிலுக்குள் நுழையும் போது தாவரங்களினாலும் நிலத்தினாலும் மற்றும் பசுமைக் குடிலுக்குள் உள்ள பொருட்களாலும் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. அத்துடன் பசுமைகுடில் காற்றுப்புகாத வகையில் அமைக்கப்பட்டிருப்பதனால் உட்பகுதியில் உற்பத்தியாகும் வெப்பம் அங்குள்ள காற்றை வெப்பமடையச் செய்கிறது. இதனால் உட்பகுதி முழுவதும் வெப்பமடைகின்றது. போதியளவு சூரிய ஒளி பசுமைக் குடிலுக்குள் வரும்போது பசுமைக்குடிலின் வெளிப்புற வெப்பத்தை விட உட்புற வெப்பம் அதிகமாகக் காணப்படும். இந்த வெப்பம் குளிர் காலங்களில் போதுமானதாக இருந்தாலும் வெப்ப காலங்களில் அதிகமாகக் காணப்படும். எனவே அத்தகைய நேரங்களில் காற்றோட்டத்தை அதிகரித்து வெப்பத்தைக் குறைத்து சீராகப் பேண வேண்டும். மேகமூட்டமான நாட்களில் சூரிய ஒளி பசுமைக்குடிலுக்கு குறைந்தளவில் கிடைப்பதால் பசுமைக்குடில் மெதுவாகவே வெப்பமடைகிறது. அத்தோடு இரவு நேரங்களில் செயற்கையாக வெப்பமூட்டப்படுகின்றது. குளிர் காலங்களில் பசுமைக்குடிலினுள் தாவரங்களுக்குத் தேவையான சூரிய ஒளி மற்றும் வெப்பநிலை ஒரே சீராகக் கிடைப்பதால் தாவரங்கள் மிகச் சிறப்பாக ஒளிச்சேர்க்கை மேற்கொண்டு நன்றாக வளர்கின்றன. சீரான இடைவெளியில் ஊட்டச்சத்துக்களும், வெளிக்காற்றும் கொடுக்கப்படுவதால் தாவரங்கள் சிறப்பாக வளர்கின்றன. இச் செயற்பாடுகள் அனைத்தும் கணினியின் மூலமாக கண்காணிக்கப்பட்டு பயிர்ச்செய்கைக்குத் தேவையான நீர், வெப்பநிலை, காற்று, சூரிய ஒளி மற்றும் கனிப்பொருட்கள் என்பன தகுந்த நேரத்தில் வழங்கப்படுகின்றன.
இந்தியா இஸ்ரேலிய வேளாண் தொழிநுட்பங்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் வகையில் 2006 ம் ஆண்டு இஸ்ரேலுடன் Indo – Israel Agricultural Project (IIAP) என்ற ஓர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. இவ் ஒப்பந்தத்தின் படி இந்தியாவின் 16 மாநிலங்களில் 23 விவசாயப் பயிற்சி மையங்கள் (Agricultural centers of excellence) அமைக்கப்பட்டு இஸ்ரேலிய வேளாண் தொழில் நுட்பங்களை இந்திய விவசாயிகளுக்கும், அவர்களின் பகுதிகளுக்கு ஏற்ற வகையிலும் பயிற்றுவிக்கின்றது.சான்றாக தமிழ் நாட்டில் திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரத்தில் காய்கறிப் பயிர்களுக்கான பயிற்சி மையமும், கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில் மாமர பயிர்ச்செய்கைக்கான பயிற்சி மையமும், ஓசூரில் கொய் மலர்களுக்கான ஆராய்ச்சி மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் நவீன தொழில்நுட்ப விவசாயப் பயிர்ச்செய்கை முறைமை சிறு விவசாயிகள் பயிர்ச்செய்கை முறைகளை மேற்கொள்வதற்கு எமது நாட்டிலும் சிறந்த வளங்கள் காணப்படுகின்றன. எனவே இஸ்ரேலின் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி விவசாயத்துறையை முன்னேற்றுவோம்.